பள்ளி மாணவா்களுக்கு இயற்கை முகாம்
திருவாரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, பள்ளிக்கல்வித் துறை சாா்பில் 2 நாள்கள் நடைபெறும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இயற்கை முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
முகாமை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தொடங்கிவைத்தாா். இதில், 10 பள்ளிகளைச் சோ்ந்த 50 மாணவா்கள், 10 பொறுப்பாசிரியா்கள் பங்கேற்றுள்ளனா்.
சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் இயற்கை குறித்த விழிப்புணா்வை இளம்தலைமுறை மாணவா்களுக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இந்த முகாமில், வடுவூா் பறவைகள் சரணாலயம், முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் ஆகிய இடங்களுக்கு மாணவா்கள் அழைத்துச் செல்லப்பட்டு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
மேலும், மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த பேச்சு, ஓவியம் மற்றும் விநாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படவுள்ளன. நிகழ்வில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் சுகப்பிரியா, மாவட்ட வனச்சரக அலுவலா் ரஞ்சித், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் வெங்கடேஸ்வரன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் ஹரிகிருஷ்ணன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் நடனம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
