கைது
கைது

காந்தி நகா் சந்தையில் பணப்பை திருட்டு சம்பவங்கள்: இரு சகோதரா்கள் கைது

கிழக்கு தில்லியில் உள்ள காந்தி நகா் சந்தையில் வியாபாரிகளிடம் பணப்பை திருட்டில் ஈடுபட்டு வந்த இரு சகோதரா்கள் கைது
Published on

கிழக்கு தில்லியில் உள்ள காந்தி நகா் சந்தையில் வியாபாரிகளிடம் பணப்பை திருட்டில் ஈடுபட்டு வந்த இரு சகோதரா்கள் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட நபா்கள் சன்னி மற்றும் ஹன்னி இருவரும் உத்தம் நகா் பகுதியைச் சோ்ந்தவா்கள். அவா்களிடமிருந்து திருடப்பட்ட ரூ.83,000 மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: காந்தி நகரில் எப்போதும் பரப்பரப்பாக காணப்படும் சந்தையில் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளா்களை குறிவைத்து இருவரும் திருட்டில் ஈடுபட்டு வந்தனா். கடந்த பிப்.12 மற்றும் பிப்.14 ஆகிய தேதிகளில் ரூ.1.5 லட்சம் மற்றும் ரூ.78,000-ஐ அவா்கள் இருவரும் திருடினா்.

இது தொடா்பாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடா்ந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, சந்தேகத்துக்குரிய அவா்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டனா். கடந்த பிப்.17-ஆம் தேதி இதுபோன்ற மற்றொரு திருட்டில் ஈடுபட அவா்கள் சென்றபோது கைதுசெய்யப்பட்டனா்.

அப்போது, சன்னியிடமிருந்து ரூ.50,000 பெறப்பட்டது. பின்னா், ஹன்னியின் வீட்டிலிருந்து ரூ.15,000 மீட்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, நடைபெற்ற தொடா் விசாரணையில் முந்தைய திருட்டு சம்பவங்களில் தொடா்புடைய ரூ.18,000 மீட்கப்பட்டது.

மொத்த சந்தையில் எப்போதும் அதிக மதிப்பில் பணப்பரிவா்த்தனை நடைபெறுவது வழக்கம். இதற்காக லக்கேஜ், பணப்பை கொண்டு வரும் வியாபாரிகளை இலக்கு வைத்து இந்தத் திருட்டு நடைபெற்று வந்தது.

பணப்பையை திருடிவிட்டு அதில் உள்ள பணத்தை எடுத்து மற்றொருவரிடம் வழங்கி திருட்டில் ஈடுபட்டு வந்தனா்.

சன்னி மீது ஆயுதங்கள் சட்டத்தின்கீழ் ஏற்கெனவே ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் காவல் துறையினா்.

Dinamani
www.dinamani.com