தில்லியில் மிகவும் பரபரப்பான ஐடிஓ பகுதியில் உள்ள பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து தில்லி காவல் துறை உயர் அதிகாரி கூறியதாவது: ஐடிஓ பகுதியில் ஹெரால்டு ஹவுஸில் பாஸ்போர்ட் மண்டல அலுவலகம் இயங்கி வருகிறது. அந்த அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தில்லி காவல் துறைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை மர்ம தொலைப்பேசி அழைப்பு வந்தது. இதைத் தொடர்ந்து, பாஸ்போர்ட் அலுவலகத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிய வந்தது.
இதனிடையே, தில்லி காவல் துறை தொலைபேசி மூலம் அழைத்து புரளியைக் கிளப்பிய நபர் அடையாளம் காணப்பட்டார். ரக்ஷர் அகமது என்ற அந்த நபரை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். விசாரணையில், ரக்ஷர் அகமது கடந்த 2007-இல் போலி விசாவில் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சென்றதும், பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதும் தெரியவந்தது. மீண்டும் வெளிநாடு செல்ல அவர் முயன்ற நிலையில், அதற்கு அவரது தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அகமது கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது என்றார் அந்த அதிகாரி.