ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் உள்பட பல்வேறு விவகாரங்களில் கேள்வி எழுப்புவோருக்கு பதிலளிக்காமல், அவர்கள் மீது அடக்குமுறையை மத்திய அரசு ஏவி வருகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடுகள், பங்குச்சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு, வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிப்பு ஆகியவை குறித்து அரசிடம் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இவ்வாறு கேள்வி எழுப்புவோருக்கு விளக்கம் அளிக்காமல், அவர்கள் மீது அடக்குமுறையை மத்திய அரசு ஏவி வருகிறது.
சுற்றுச்சூழல் பாதிப்புகளை சுட்டிக்காட்டி வந்த கிரீன்பீஸ் தன்னார்வ அமைப்பின் வங்கிக் கணக்குகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. ஊடக நிறுவன உரிமையாளர் ராவக் பாலின் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர் என்று சிதம்பரம் தனது சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
விமானப் படைக்கு புதிதாக 36 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்வதற்காக, பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஆதாயம் அடைவதற்கு மத்திய அரசு உதவியதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், அந்த குற்றச்சாட்டை மத்திய அரசும், ரிலையன்ஸ் நிறுவனமும் மறுத்து வருகின்றன.