மகாவீரரின் கருத்துகளை பின்பற்றினால் நன்னடத்தை ஏற்படும்: மனோஜ் திவாரி
மகாவீரரின் கருத்துகளைப் பின்பற்றினால், வாழ்வில் நன்னடத்தை ஏற்படும் என்று பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி கூறினார்.
மகாவீரரின் ஜெயந்தியை ஒட்டி, வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் பல்வேறு சமய நிகழ்ச்சிகளில் பாஜகவின் தில்லி தலைவரும், அத்தொகுதி எம்பியுமான மனோஜ் திவாரி புதன்கிழமை பங்கேற்றார்.
அப்போது, பக்திப் பாடல்களைப் பாடி அவர், காபூர் நகரில் ஜெயின் சமுதாய நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில், "பகவான் மகாவீரர், தாம் போதித்த கொள்கையின்படி வாழ்ந்து காட்டினஆர். "வாழு - வாழ விடு' என்பது அவரது கொள்கைகளில் ஒன்று.
உண்மை, அகிம்சை, சகோதரத்துவம் ஆகியவற்றைக் கடைப்பிடித்தார். அவர் கூறிய இந்தக் கொள்கைகளைப் பின்பற்றினால், சமூகத்தில் அமைதி, பாதுகாப்பு இருக்கும். நமது வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டாக அமையும்' என்றார்.
ஷாதராவில் லோனி சாலையில் அமைந்துள்ள சங்கத் மோச்சன் ஹனுமன் ஜன்மோத்ஸவ் நிகழ்வில் பங்கேற்க கூடியிருந்த பக்தர்கள் மத்தியில் மனோஜ் திவாரி பேசுகையில், "பலம், அறிவு, கற்றல் ஆகியவற்றை ஒருவர் இழந்துவிட்டால், அவர் வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடும். பகவான் சங்கத் மோச்சன் ஹனுமனை வழிபட்டால் பலம், அறிவு, கற்றல் அறிவு ஆகியவை கிடைக்கும் என சமய நூல்களில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது' என்றார்.
நிகழ்ச்சியில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் பன்னாட்டுச் செயல் தலைவர் அலோக் குமார் பேசுகையில், "உலகின் எந்தப் பகுதியில் வன்முறை நிகழ்ந்தாலும் அழிவால் மனிதகுலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அன்பின் அடையாளமாக அகிம்சை உள்ளது. சகோதரத்துவம் இயற்கையைப் பாதுகாக்கிறது. ஆகவே, பகவான் மகாவீரரின் கருத்துகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்' என்றார்.
இந்த நிகழ்ச்சிகளில் பாஜக மாவட்டத் தலைவர் கைலாஷ் ஜெயின், ஊடகத் துறை இணைத் தலைவர் ஆனந்த் திரிவேதி, பாஜக தலைவர் விரேந்தர் கண்டேல்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.