தில்லியில் உடற்பயிற்சியாளர் உள்பட இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டுவந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து காவல் துறை குற்றப்பிரிவு துணை ஆணையர் ராஜேஷ் தியோ வெள்ளிக்கிழமை கூறியதாவது: தில்லி மீட் நகரைச் சேர்ந்தவர் அவிநிஸ் 28. இவரது கூட்டாளி அனில். மீட் நகரில் யார் "தாதா'வாக செயல்படுவது என்பதில் இவர்களுக்கும் உடற்பயிற்சியாளரான கோவிந்த பாட்டி என்பவருக்கும் இடையே முன் பகை இருந்து வந்தது. அப்போது அனிலை, கோவிந்த பாட்டி அடித்து உதைத்துள்ளார்.
இதற்குப் பழி தீர்க்கும் நோக்கில் கோவிந்த பாட்டியைக் கொல்ல அவிநிஸ், அனில் மற்றும் அவர்களது கூட்டாளிகள் சதித் திட்டம் தீட்டினர். இந்நிலையில், கடந்த மே 29-ஆம் தேதி உடற்பயிற்சி நிலையத்திலிருந்து கோவிந்த பாட்டி தனது இரண்டு நண்பர்களுடன் வீட்டுக்கு வந்த போது அவிநிஸ், அனில் மற்றும் அவர்களது கூட்டாளிகள் சரமாரியாகத் தாக்கினர். துப்பாக்கிச் சூட்டில் கோவிந்த பாட்டியும், வழிபோக்கர் ஒருவரும் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் அனில் மற்றும் கூட்டாளிகள் நால்வரை போலீஸார் ஏற்கெனவே கைது செய்தனர். அவிநிஸை தேடி வந்தனர்.
இந்நிலையில், தனது நண்பர்களைப் பார்ப்பதற்காக அவிநிஸ் மண்டோலிக்கு வரவுள்ளதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவிநிஸ் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார் என்றார் அந்த அதிகாரி.