பாகிஸ்தான் பிரதமர் போல மோடி செயல்படுவதாகவும், மாநில அரசுகளைப் புறக்கணிப்பதாகவும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசைக் கண்டித்தும், சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும் முதல்வர் சந்திரபாபு நாயுடு தில்லியில் திங்கள்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இப்போராட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்று சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினர்.
ஆந்திர பவனில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தில்லி முதல்வர் கேஜரிவாலும் பங்கேற்று சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியதாவது:
பிரதமர் மோடி, பாஜகவுக்கு மட்டும் பிரதமர் அல்ல. ஒட்டுமொத்த நாட்டுக்கும் அவர்தான் பிரதமர். ஆனால், அந்த எண்ணம் துளியும் இல்லாமல் அவர் மாநில அரசுகள் மீது காழ்புணர்ச்சியுடன் செயல்படுகிறார். மேற்குவங்கம், தில்லி, ஆந்திரம் என எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில அரசுகளுக்குத் தொந்தரவு கொடுப்பதையும், அந்த மாநிலங்களை புறக்கணிப்பதையும் பிரதமர் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அவர், இந்தியாவுக்குப் பிரதமர் போல செயல்படவில்லை. மாறாக, பாகிஸ்தான் பிரதமர் போன்று செயல்படுகிறார் என்று கேஜரிவால் தெரிவித்தார்.