சுங்கத் துறை அதிகாரியின் வீட்டுக்குள் புகுந்து பல லட்சம் மதிப்புள்ள பணம், நகைகளைத் திருடிச் சென்ற சம்பவத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றும் ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
இச்சம்பவம் குறித்து தில்லி காவல் துறையின் தென்மேற்கு காவல் சரக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சுங்கத் துறையில் கூடுதல் ஆணையராகப் பணியாற்றி வருபவர் டாக்டர் அமன்தீப் சிங். இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்தினருடன் தில்லியில் இருந்து வெளியூருக்குச் சென்றிருந்தார். பின்னர் வீட்டுக்கு திரும்பிய அவர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் இருந்த ரூ.5 லட்சம் ரொக்கம், ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டுப் போனது தெரியவந்தது. இது குறித்து சரோஜினி நகர் காவல் நிலையத்தில் அமன்தீப் சிங் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, வழக்குப் பதிந்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, அவரது வீட்டில் வேலைசெய்த ஊழியர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் முன்னர் வேலை செய்த அபிஷேக் குமார் (24) இந்த திருட்டில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்து வந்தது தெரிய வந்ததாக காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.