கிரேட்டர் நொய்டாவில் சுமார் 25,000 லிட்டர் கள்ளச்சாராயத்தை காவல்துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து கௌதம் புத் நகர் மாவட்ட காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் வைபவ் கிருஷ்ணா கூறியதாவது:
கிரேட்டர் நொய்டாவிலுள்ள கிட்டங்கி ஒன்றில் கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து, காவல்துறையினர் அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில், 3 லாரிகளில் சுமார் 25,000 லிட்டர் அளவுக்கு கள்ளச்சாராயம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், அங்கிருந்த 10 பேரை கைது செய்தனர். இந்த கள்ளச்சாராயம் ராஜஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்டு, உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்தது என்றார் வைபவ் கிருஷ்ணா.
உத்தரப் பிரதேசத்திலும், உத்தரகண்டிலும் அண்மையில் கள்ளச்சாராயம் குடித்து, பலர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க அந்த மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.