தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மார்ச் 1-ஆம் தேதி முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.
தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது நாள் அலுவல் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது: பாகிஸ்தானை பிரதமர் நரேந்திர மோடி சமாளித்துக் கொள்ளட்டும். தில்லியில் சட்டம், ஒழுங்கு நிலை மோசமடைந்து வருவதால் காவல் துறையையும், அடிப்படை சுகாதார வசதிகளைச் செய்ய மறுப்பதால் மாநகராட்சிகளையும் தில்லி அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பான விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் புறமுதுகில் குத்துகின்றன. ஆண்டுதோறும் ரூ.1.5 லட்சம் கோடி அளவுக்கு வருமான வரி பங்கை மத்திய அரசுக்கு தில்லி அரசு அளித்து வருகிறது. அந்தப் பங்கிலிருந்து தில்லி அரசுக்கு மத்திய அரசு வெறும் ரூ. 325 கோடியை மட்டுமே அளிக்கிறது. இதுபோன்ற அராஜகம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்கூட நடந்தது கிடையாது.
எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும், தில்லியின் உழைப்பை உறுஞ்சுகிறது. நாங்கள் வலியுறுத்தும் முழு மாநில அந்தஸ்து என்பது சிறந்த சட்டம் - ஒழுங்கையும், பெண்களுக்கான பாதுகாப்பையும் குறிக்கிறது. தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து கிடைக்கப் பெற்றால், லண்டனைப் போலவும், பாரீஸ் நகரத்தைப் போலவும் தூய்மையான மாநகரமாக தலைநகர் தில்லி மாறும். 10 ஆண்டுகளில் அனைவருக்கும் சொந்தக் குடியிருப்பும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க, மத்திய அரசை வலியுறுத்தி மார்ச் 1-ஆம் தேதி முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளேன். இந்தப் போராட்டத்தில் மரணத்தை சந்தித்ததாலும், சந்தோஷம்தான். தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்
என்றார் அவர்.