தில்லி முதல்வர் கேஜரிவாலின் மகள் ஹர்ஷிதா கேஜரிவால் கடத்தப்பட உள்ளதாக முதல்வர் அலுவலகத்துக்கு மிரட்டல் இ-மெயில் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஹர்ஷிதாவுக்கு தனிப் பாதுகாப்பு அதிகாரியை தில்லி காவல் துறை நியமித்துள்ளது.
இது தொடர்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கடந்த 9- ஆம் தேதி முதல்வரின் அலுவல்பூர்வ இ- மெயிலுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து மெயில் வந்தது. அதில், தில்லி முதல்வரின் மகள் ஹர்ஷிதாவை கடத்தவுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, ஹர்ஷிதாவுக்கு தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அந்த மின்னஞ்சலை அனுப்பியது யார் என்பது குறித்து தில்லி சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றார் அவர். இதனிடையே, கேஜரிவாலுக்கு மூன்று தினங்களுக்கு முன்பே இந்த மிரட்டல் இ-மெயில் வந்ததாகவும், இது குறித்து தில்லி போலீஸில் அப்போதே புகார் அளித்துவிட்டதாகவும் முதல்வரின் தனி உதவியாளர் தெரிவித்தார்.