தேசியத் தலைநகர் வலயம், நொய்டாவில் சாலைத் தடுப்பு மீது கார் மோதிய விபத்தில் மனை வணிக தொழிலதிபர் உயிரிழந்தார்.
இதுகுறித்து நொய்டா செக்டார் 39 காவல் நிலைய அதிகாரி உதய் பிரதாப் சிங் கூறியதாவது: நொய்டா செக்டார்-50இல் உள்ள மகாகுன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் யோகேந்திர சிங் (53 ). அவர் மனை வணிகத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று இரவு அவர் செக்டார் 37 பகுதியில் உள்ள சாலை வழியாக தனது காரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, கார் திடீரென சாலைத் தடுப்பு மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் கார் நொறுங்கியது. காருக்குள் யோகேந்திர சிங் சிக்கிக் கொண்டார். தகவல் அறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை காரில் இருந்து மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.