தில்லியில் நஜஃப்கர் பகுதியில் உள்ள கலிங்கா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தின் பள்ளி வளாகத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் திருவுருவச் சிலையை தில்லி அரசின் சமூக நலத் துறை அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம் புதன்கிழமை திறந்துவைத்தார்.
கலிங்கா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தின் (கேஐஎஸ்எஸ்) மாணவர்களிடம் அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம் உரையாற்றினார். அப்போது, அனைவருக்கும் அம்பேத்கர் ஒரு உந்து சக்தியாக இருந்தார். அவருடைய போராட்டம், உந்துதல் ஆகியவற்றை அவரது சிலை மாணவர்களுக்கு நினைவூட்டுவதாக இருக்கும் என்றார்.
மேலும், சுல்தான்பூர் மஜ்ரா பகுதியில் எஸ்சி, எஸ்டி துறையின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட திறந்தவெளி மையத்தையும் அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம் திறந்துவைத்தார்.
கலிங்கா சமூக அறிவியல் கல்வி நிறுவனமானது தில்லி அரசு மற்றும் புவனேஸ்வர் பகுதியில் உள்ள கேஐஎஸ்எஸ் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாகும்.
நலிந்த பிரிவு மாணவர்களுக்கு கல்வி அளிப்பதன் மூலம் சமூகத்தில் வறுமையை ஒழிப்பதை இலக்காகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.