தில்லி நஜஃப்கர் பகுதியில் சில்லறை வர்த்தக வணிகரிடம் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்து, துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது: தில்லி நஜஃப்கர் பகுதியில் சில்லறை வர்த்தக வணிகத்தில் ஈடுபட்டு வரும் வணிகரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிலர் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்து வந்தனர். மேலும், அவரது கடையில் துப்பாக்கியால் சுட்டும் மிரட்டனர். இது தொடர்பாக அந்த வணிகர் போலீஸில் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்தப் பகுதியைச் சேர்ந்த விக்கி (26) டிங்கு (20), ஆகாஷ் (28) ஆகியோர் இந்த மிரட்டல் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து,அவர்களை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், மூவரும் கேர் சாலைப் பகுதியில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சனிக்கிழமை இரவு அவர்களைப் பிடிக்க போலீஸார் அந்தப் பகுதிக்குச் சென்றனர். அப்போது, அவர்கள் மூவரும் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
பதிலுக்கு போலீஸாரும் அவர்களை நோக்கி துப்பாக்கியால் திருப்பிச் சுட்டனர். இதில், காயமடைந்த விக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, மூவரும் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.