தேச துரோக வழக்கு: கன்னையா குமார் மீதான விசாரணைஅனுமதிக்கு அவகாசம் கோரியது தில்லி அரசு

தேச துரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர்

தேச துரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்னையா குமார் உள்ளிட்டோருக்கு எதிரான விசாரணைக்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவு செய்ய பெருநகர முதன்மை நீதிமன்றத்தில்  தில்லி அரசு ஒரு மாதம் அவகாசம் கோரியது.
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 2016, பிப்ரவரி 9-ஆம் தேதி மாணவர்கள் பேரணி நடைபெற்றது. அதற்கு தலைமை தாங்கியதாகவும், தேச விரோத முழக்கங்களுக்கு  ஆதரவாக இருந்ததாகவும் அப்பல்கலை. மாணவர் சங்கத்தின் அப்போதைய தலைவர் கன்னையா குமார் உள்ளிட்டோருக்கு எதிராக தில்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பான குற்றப்பத்திரிகையை தில்லி காவல் துறையினர் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.  எனினும்,  இந்த விவகாரத்தில் கன்னையா குமார் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள தில்லி அரசின் அனுமதி தேவை என்றும்,  இது தொடர்பான கடிதத்தை தில்லி அரசுக்கு அனுப்பி இருப்பதாகவும் தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு துணை ஆணையர் பிரமோத் குஷாவா சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்போது,  தில்லி அரசுக்கு பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு பெருநகர முதன்மை நீதிமன்ற நீதிபதி தீபக் ஷெராவத் அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தில்லி அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த விவகாரத்தில் கன்னையா குமார் உள்ளிட்டோருக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கான அனுமதி வழங்குவது தொடர்பாக முடிவு செய்ய  ஒரு மாதம் அவகாசம் தேவை எனக் கேட்டுக் கொண்டார்.
இதையேற்றுக் கொண்ட  நீதிபதி  தீபக் ஷெராவத், குறிப்பிட்ட தேதியைத் தெரிவித்து முறையான பதிலை தில்லி அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com