தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஏப்ரல் 14-ஆம் தேதி பள்ளிக்கு விடுமுறை என்பதால் தமிழ்ப் புத்தாண்டு தினக் கொண்டாட்டம் டிடிஇஏ பள்ளிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழரின் பழைமை, பண்பாடு, சிறப்புகள் ஆகியவற்றை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இவ்விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அனைத்து டிடிஇஏ பள்ளிகளிலும் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
மாணவர்கள் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் புத்தாண்டை வரவேற்றுப் பேசினர். அத்துடன், தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த அண்ணல் அம்பேத்கரின் சிறப்புகளையும் எடுத்துக் கூறினர். அவரின் விடா முயற்சி, உழைப்பு, நம்பிக்கை, அவர் ஆற்றிய பணிகள் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைத்தனர்.
புத்தாண்டை வரவேற்று மாணவர்கள் தமிழில் கவிதைகள் வாசித்தனர். கும்மிப் பாட்டு, நடனம் என கலை நிகழ்ச்சிகளையும் வழங்கினர். ராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலர் ஆர். ராஜு கலந்துகொண்டு அனைத்துப் பள்ளி முதல்வர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.