தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தேர்தலை ரத்துசெய்யக் கோரி தமிழ் பேரரசுக் கட்சியின் தலைவரும், திரைப்பட இயக்குநருமான கௌதமன் தில்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி:
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி, பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகிய இருவரின் வேட்பு மனுக்களும் சட்ட விதிகளை மீறி தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வேட்பு மனுத்தாக்கலின்போது பாரத் பெட்ரோலியம் நிறுவன இயக்குநராக ஆதாயம் தரும் பதவியில் தமிழிசை இருந்தார். அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது சட்டத்துக்குப் புறம்பானதாகும்.
திமுக வேட்பாளர் கனிமொழியின் வேட்புமனுவில் சொத்துமதிப்பு சரியாக காட்டப்படவில்லை. அவரது கணவர், மகனின் சொத்துக்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அவரின் மனுவையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது.
பல முறைகேடுகள் நடந்துள்ள தூத்துக்குடியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைந்ததில் திமுக, அதிமுக, பாஜகவுக்கு சமபங்குள்ளது.
இந்த ஆலை விவகாரத்தில் மூன்று கட்சிகளையும் எதிர்த்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட மனுத் தாக்கல் செய்தேன். ஆனால், தூத்துக்குடியில் ஜனநாயகம் இல்லாததால் எனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுவிட்டேன் என்றார் கெளதமன்.