சாக்கடையில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு
நொய்டாவில் திங்கள்கிழமை சாக்கடையில் விழுந்த 6 வயது சிறுவன் செவ்வாய்க்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டதாக தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்) அதிகாரி தெரிவித்தார்.
இதுகுறித்து என்டிஆர்எஃப் அதிகாரி ஜிதேந்திரா குமார் யாதவ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: நொய்டாவைச் சேர்ந்த 6 வயது சிறுவன் சில குழந்தைகளுடன் நொய்டா சாலர்பூர் காதர் கிராமம் அருகே உள்ள சாக்கடையை திங்கள்கிழமை மதியம் கடந்து கொண்டிருந்தான். அப்போது, சாக்கடைக்குள் சிறுவன் விழுந்தான். இதையடுத்து, நொய்டா காவல் துறையினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்கு சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். சிறுவனின் உடல் சாக்கடையின் 1,500 மீட்டர் ஆழத்தில் இருந்தது கண்டறியப்பட்டது.
விசாரணையில், இறந்த சிறுவன் நொய்டா செக்டர் 81-இல் உள்ள கிராமத்தைச் சேர்ந்த முதலாம் வகுப்பு மாணவர் சௌரவ் என்பது தெரிய வந்தது என்றார் அந்த அதிகாரி.