மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரை புதிதாக பதவியேற்ற ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியை நஜ்மா அக்தர் தில்லியில் திங்கள்கிழமை சந்தித்தார். அப்போது, பல்கலைக்கழகத்தின் அனைத்து வளர்ச்சி தொடர்பாக அமைச்சருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவது தொடர்பாக அமைச்சரின் முழு ஒத்துழைப்பை கோரினார். மேலும், தொழில்முறை முதுகலைப் பட்டப் படிப்பையும், நீண்ட, குறுகிய காலத் திட்டங்களுடன்கூடிய புதிய தொழில்சார் படிப்புகளைஅறிமுகப்படுத்தவும் வலியுறுத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது, ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக பேராசிரியை அக்தர் நியமிக்கப்பட்டதற்காக அவருக்கு மத்திய அமைச்சர் ஜாவடேகர் வாழ்த்துத் தெரிவித்தார். மேலும், நாட்டில் பல்கலைக்கழகங்கள் பிரிவில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் 12-ஆவது இடத்தில் இருப்பதற்காகவும் துணைவேந்தருக்கு அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.
குருஷேத்ரா பல்கலைக்கழகத்தில் கல்விப் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவரான பேராசிரியை நஜ்மா அக்தர், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் 16-ஆவது துணைவேந்தர் ஆவார். மேலும், தில்லியில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் முதல் பெண் துணைவேந்தர் ஆவார்.