தில்லி சாலிமார் பாக் பகுதியில் உள்ள மேக்ஸ் தனியார் மருத்துவமனையின் 7-ஆவது மாடியிலிருந்து குதித்து அதன் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். சனிக்கிழமை அதிகாலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பாக வடமேற்கு காவல் சரக துணை ஆணையர் விஜயேந்திர ஆர்யா ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
தில்லி ஹைதர்பூர் லோஹியா கேம்ப் பகுதியில் வசித்து வந்தவர் அனில் (20). சாலிமார் பாக் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சுகாதாரப் பிரிவில் ஒப்பந்த ஊழியராக கடந்த இரண்டு வருடங்களாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், அவர் சனிக்கிழமை அதிகாலையில் மருத்துவமனையின் மேல் தளத்துக்குச் சென்றுள்ளார்.
பின்னர் அதிகாலை 4.30 மணியளவில் 7-ஆவது மாடியில் உள்ள பாலகனியிலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது இந்த முடிவுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.