செப்டம்பர் 6-இல் ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தல்
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தேர்தல் செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என்றும் அடுத்த இரண்டு நாள்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்றும் இந்தத் தேர்தலை நடத்தும் குழு வெள்ளிக்கிழமை அறிவித்தது. தேர்தல் குழு வெள்ளிக்கிழமை மேலும் தெரிவித்துள்ளதாவது:
தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஆகஸ்ட் 26ஆம் தேதி வழங்கப்படும். வேட்பு மனுத் தாக்கல் ஆகஸ்ட் 27ஆம் தேதியும், வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 28ஆம் தேதியாகும். செப்டம்பர் 4ஆம் தேதி வேட்பாளர்களின் விவாத நிகழ்ச்சி நடைபெறும்.
வாக்குப்பதிவு செப்டம்பர் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பின்னர் மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். அன்றைய தினம் இரவு 9 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு செப்டம்பர் 8ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்' என்று தெரிவித்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 6 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு 67.8 சதவீத வாக்குகள் பதிவாகின. சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர். இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த நான்கு மாணவர் சங்கங்களும் ஒன்று சேர்ந்து 4 முக்கியப் பதவிகளைக் கைப்பற்றின. வன்முறையால் சுமார் 14 மணி நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டது.