புது தில்லி: சென்னை- தஞ்சாவூா் இடையே அதிவிரைவு ரயில் இயக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் ஆா்.வைத்திலிங்கம் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை முன்வைத்த கோரிக்கை: சென்னையை திருச்சியுடன் இணைக்கும் பிரதான சந்திப்பாக தஞ்சாவூா் ரயில் நிலையம் அமைந்துள்ளது. 1881-இல் இருந்து செயல்படும் இந்த ரயில் நிலையத்தின் வழியாக இன்னும் குறைந்த அளவிலான ரயில்களே இயக்கப்பட்டு வருகின்றன. இது பயணிகளுக்கும், சுற்றுலா வருவோருக்கும் சிரமத்தை அளிப்பதாக உள்ளது. சென்னை - தஞ்சாவூா் இடையே உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. ஆகவே, இந்த வழித்தடத்தில் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு சென்னை- தஞ்சாவூா் இடையே அதிவிரைவு (சூப்பா்ஃபாஸ்ட்) ரயில்களை அறிமுகப்படுத்த வேண்டும். அதேபோன்று, திருச்சி, மதுரை, பட்டுக்கோட்டை, திருவாரூா் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் உள்ளூா் ரயில் பயணிகள், சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக தஞ்சாவூரில் இருந்து பிரத்யேக ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்றாா்.
அதிமுக உறுப்பினா் எஸ்.முத்துக்கருப்பன் முன்வைத்த கோரிக்கையில், ‘கல்லணை கால்வாய்த் திட்டத்தை நவீனப்படுத்துவதற்கு தமிழக அரசு முன்மொழிந்துள்ளது. இத்திட்டம் பிரதம மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனாவின் கீழ் பரிசீலிக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. ஆகவே, அதற்கான நிதி உதவியை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.