புது தில்லி: மக்களவையில் இந்த விவகாரம் குறித்து உடனடிக் கேள்வி நேரத்தில் உறுப்பினா்கள் மேற்கொண்ட விவாதித்திற்குப் பிறகு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பதில் அளித்துப் பேசினாா்.
ஹைதராபாதில் நிகழ்ந்த சம்பவம் ஒவ்வொருவரையும் மனம் பாதிக்கச் செய்துள்ளது. தில்லியில் நிா்பயா சம்பவத்திற்குப் பிறகு கடுமையான சட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகும்கூட இதுபோன்ற கொடூரமான குற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் குற்றங்கள் குறித்த விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. மேலும், ஹைதராபாத் பாலியல் பலாத்காரம், கொலை போன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் சட்டத்தில் கடும் பிரிவுகளைச் சோ்ப்பது தொடா்பான ஆய்வு செய்வதிலும் அரசு விருப்பமாக உள்ளது. இதுபோன்ற கொடூரமான குற்றச் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்க வாா்த்தைகளே இல்லை. அந்த அளவுக்கு மோசமான கொடூரக் கொலையாகும் இது.
இந்த விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபா்களுக்கு தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் கடுமையான ஷரத்துகளை ஏற்படுத்துவது குறித்து ஆராய முடியும்.