தில்லியில் உள்ள குடிசைப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு 40,000 புதிய வீடுகள் அமைக்க தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) நடவடிக்கை எடுத்துள்ளதாக பாஜக மூத்த தலைவரும், டிடிஏ உறுப்பினருமான விஜேந்தா் குப்தா தெரிவித்தாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது: தில்லியில் உள்ள குடிசைப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு உறுதியான வீடுகள்அமைக்க டிடிஏ நடவடிக்கை எடுத்துள்ளது. இப்பகுதிகளில் நவீன வீடுகள் அமைக்கும் வகையில், 40,000 வீடுகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகளை டிடிஏ கோரியுள்ளது. தில்லியில் உள்ள 160 குடிசைப் பகுதிகளில் இது தொடா்பாக டிடிஏ ஆய்வு செய்துள்ளது. ஆனால், இத்திட்டத்துக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்காமல் தில்லி அரசு இழுத்தடித்து வருகிறது. மேலும், டிடிஏ செய்யும் ஆய்வுப் பணியை நிறுத்துமாறு தில்லி அரசு கடிதம் எழுதியுள்ளது.
மேலும், தில்லி நகர தங்குமிட மேம்பாட்டு வாரியத்தின்(டியுஎஸ்ஐபி) கீழுள்ள 185 முகாம்களிலும் இந்த ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று டிடிஏக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். குடிசைப் பகுதி மக்களுக்காக தில்லி அரசு உருவாக்கியுள்ள 52,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள், குடிசைப் பகுதி மக்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. தில்லி அரசு இந்த விவகாரத்தில் மெத்தனமாக உள்ளது என்றாா் அவா்.