ஜெயலலிதாவுக்கு "பாரத ரத்னா': மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மக்களவையில் அதிமுக திங்கள்கிழமை வலியுறுத்தியது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மக்களவையில் அதிமுக திங்கள்கிழமை வலியுறுத்தியது.
 இது தொடர்பாக மக்களவையில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் எம். உதயக்குமார் முன்வைத்த கோரிக்கையில், "தமிழக முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவும், அவரது முழு வெங்கல உருவச் சிலையை நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான செலவை அதிமுக ஏற்கும். 
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். மக்களவையில் மற்ற அதிமுக உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைவிவரம் வருமாறு:
இடஒதுக்கீடு நீட்டிக்கப்படுமா?: திருவள்ளூர் தொகுதி அதிமுக உறுப்பினர் டாக்டர் பி. வேணுகோபால்: இந்தியாவில் சாதிப் பிறப்பால் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால்தான், சாதி அமைப்புமுறை ஆழமாக வேரூன்றியுள்ளது. சமூக மேம்பாடு நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. மேலும், மதத்தால் சாதி முடிவு செய்யப்படுவதில்லை என்பதும் உண்மையாகும். 
ஆனால், கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு சமூக- சமத்துவ- இடஒதுக்கீடு- பயன்கள் மறுக்கப்படுகின்றன. இது மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். எனவே, மத்திய அரசு அனைத்து இதர எஸ்சி பட்டியலில் கிறிஸ்தவ எஸ்சி பிரிவினரையும் சேர்க்க வேண்டும்.
சுரங்கப்பாதை வேண்டும்: காஞ்சிபுரம் தொகுதிஅதிமுக உறுப்பினர் கே.மரகதம்:செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு வசதி, திருக்கழுக்குன்றம்-செங்கல்பட்டு இடையே லெவல் கிராஸிங் (எண்45) பகுதியில் சுரங்கப்பாதைஆகியவை அமைக்க வேண்டும். குருவாயூர், திருச்செந்தூர், சோழன் , மும்பை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்களை மதுராந்தகம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜோலார்பேட்டையில் ரயில்கள் நின்று செல்லுமா?: கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக உறுப்பினர் கே.அசோக்குமார்: மங்களூர் எக்ஸ்பிரஸ், சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சென்னை , காட்பாடி, மொரப்பூர், சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கி
ன்றன.
ஆனால், ஜோலார்பேட்டை ரயில் சந்திப்பில் நிறுத்தப்படுவதில்லை. இதனால், கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து சென்னை, மங்களூர் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குஉள்ளாகின்றனர். இதனால், அந்த இரண்டு ரயில்களும் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மருத்துவ மேற்படிப்பு விவகாரம்: மதுரை தொகுதி அதிமுக உறுப்பினர் ஆர்.கோபாலகிருஷ்ணன்: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மருந்துப் பிரிவில் மருத்துவப் பட்ட மேற்படிப்பை தொடர்வதற்கு இந்திய மருத்துவக் குழுவிடம் அனுமதி கிடைக்காததால் இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர். எனவே, இந்த விவகாரத்தில் மத்தியஅரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
சிதம்பரத்தில் விரைவு ரயில் நின்று செல்ல வேண்டும்: சிதம்பரம் தொகுதி அதிமுக உறுப்பினர் எம்.சந்திரகாசி பேசுகையில், "சிதம்பரம் ரயில் நிலையத்தில் தாம்பரம் - திருநெல்வேலி அந்தோதயா எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்- புவனேஸ்வர் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com