தில்லியில் ரூ. 1,572 கோடியில் 6 முக்கிய திட்டங்கள் உள்ளிட்ட 8 திட்டங்களை செயல்படுத்த தில்லி அரசின் செலவின நிதிக் குழு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக செலவின நிதிக் குழுவின் தலைவரும், தில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா தில்லியில் அளித்த பேட்டி:
தில்லி அரசின் செலவின நிதிக் குழுவின் கூட்டத்தின்போது, தில்லியில் 6 முக்கிய திட்டங்கள் உள்ளிட்ட 8 திட்டங்களை செயல்படுத்த குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ரூ. 526.66 கோடியில் ஓக்லாவில் ஒருங்கிணைந்த பொறியியல், பாலிடெக்னிக் வளாகம் கட்டவும், ரூ. 128.95 கோடி செலவில் ஆஷ்ரம் பகுதியில் இருந்து டிஎன்டி வரை மேம்பாலம் கட்டவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரூ. 36.70 கோடியில் நஜஃப்கர் பகுதியில் ஆர்சிசி பாலம் கட்டவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
துவாரகாவில் உள்ள தாதா தேவ் அரசு மருத்துவமனையை ரூ. 53.44 கோடியிலும், நரேலாவில் உள்ள சத்யவதி ராஜா ஹரீஷ் சந்திரா மருத்துவமனையை ரூ.244.35 கோடியிலும், சாஸ்திரி பாகில் உள்ள ஜக் பிரவீஷ் சந்திரா மருத்துவமனையை ரூ.189.77 கோடியிலும் புனரமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. தில்லி அரசுப் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் ரூ. 326.36 கோடியில் புனரமைக்கப்படவுள்ளன. மேலும், ரூ.65.63 கோடியில் லால் ஜெயின் மந்திரில் இருந்து பதேக்புரி மசூதி வரையான பகுதி புனரமைக்கப்படும் என்றார் அவர்.