தேசியத் தலைநகர் வலயம் நொய்டாவில் ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து தீயணைப்புத் துறை உயரதிகாரி கூறியதாவது:
நொய்டா செக்டார் 63-இல் உள்ள ஹெச் பிளாக்கில் ஆடை தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. தில்லியைச் சேர்ந்த அதுல்யா சர்மாவுக்குச் சொந்தமான இந்த தொழிற்சாலையில் ஆடைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதாக செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர். ஆடைகளை காயவைக்கும் சாதனம் உள்பட மொத்தம் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன என்றார் அந்த அதிகாரி.