ஆட்சியில் இருப்பவர்கள் தேசத்துரோக சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
காலனி ஆதிக்கத்தில் கொண்டுவரப்பட்ட தேசத்துரோக சட்டம் (இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு124ஏ) தற்போதைய காலத்தில் தேவையில்லாத ஒன்று. உண்மையான தேசத்துரோக சட்டம் என்பது ஆட்சியில் உள்ளவர்கள் அமைப்புகளையும், சட்டங்களையும் தவறாகப் பயன்படுத்துவதுதான். மேலும், வன்முறையைத் தூண்டுவதன் மூலம் பாதுகாப்பையும், அமைதியையும் குலைப்பதுதான். 2019-இல் அவர்களைத் தண்டியுங்கள். அரசை மாற்றுங்கள், தேசத்தை காப்பாற்றுங்கள் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.