நீலகிரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி: மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. வலியுறுத்தல்

நீலகிரி மாவட்டத்தில் மருத்துவமனையுடன்கூடிய மருத்துவக் கல்லூரியை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை

நீலகிரி மாவட்டத்தில் மருத்துவமனையுடன்கூடிய மருத்துவக் கல்லூரியை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் கே.ஆர். அர்ஜுனன் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் புதன்கிழமை பூஜ்ய நேரத்தில் அவர் முன்வைத்த கோரிக்கை: மத்திய அரசு நாடு முழுவதும் பின்தங்கிய மாவட்டங்களில் புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க உள்ளது. 
தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம், ஒரு மலைப் பிரதேசமாகும். இந்த மாவட்டத்தின் மக்கள்தொகை சுமார் 7 லட்சமாக உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பழங்குடி மக்கள். இதர வகுப்பினரும் வசித்து வருகின்றனர். 
இவர்களுக்கு மருத்துவ வசதி வேண்டுமானால், 100 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு கோவைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். அவசரகால மருத்துவ உதவியும் கிடைப்பதில்லை.
நீலகிரியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க ஹிந்துஸ்தான் ஃபோட்டோ பிலிம் நிறுவனத்திடம் 300 ஏக்கர் நிலம் உள்ளது. 
இந்த ஆலை மூடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் இனிமேல் இயங்க வாய்ப்பில்லை. எனவே, அந்தக் காலி இடத்தில் மருத்துவமனையுடன்கூடிய ஓர் அரசு மருத்துவக் கல்லூரியை மத்திய அரசு அமைத்துத் தர வேண்டும். 
மேலும், உதகையில் உள்ள மக்களின் தாகம் தீர்க்க நல்ல குடிநீர் வழங்கவும், இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் உதகமண்டலத்தில் தகவல் தொழில்நுட்ப (ஐடி) பூங்காவை அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com