தில்லியில் புதிதாக நியமிக்கப்பட்ட 280 மண்டல காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர்கள், 14 மாவட்டக் கமிட்டி பார்வையாளர்களின் ஆலோசனைக் கூட்டம், செயல் தலைவர் ராஜேஷ் லிலோத்யா முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
மக்களவைத் தேர்தலில் தில்லியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் ஏழு தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவினர். இதைத் தொடர்ந்து, தேர்தல் தோல்வி குறித்து ஆராய கட்சியின் தில்லி தலைவர் ஷீலா தீட்சித் 5 பேர் குழுவை அமைத்தார். இக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், 280 மண்டல காங்கிரஸ் கமிட்டிகளை கலைத்து அண்மையில் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, புதிதாக 280 மண்டல காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர்களை அக்கட்சி வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இந்நிலையில், அவர்களுடன் செயல் தலைவர் ராஜேஷ் லிலோத்தியா ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், அவர் பேசுகையில், கட்சியின் முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மூத்த தலைவர்கள், அடிமட்டத் தொண்டர்கள் ஆகியோருடன் மண்டல காங்கிரஸ் கமிட்டிப் பார்வையாளர்கள் தொடர்பில் இருக்க வேண்டும். வாக்கு மைய அளவில் கட்சியைப் பலப்படுத்துவதை மண்டலக் கமிட்டிப் பார்வையாளர்கள் நோக்கமாகக் கொள்ள வேண்டும்' என்றார்.
இக்கூட்டத்தில், தில்லி முன்னாள் அமைச்சர்கள் ஏ.கே. வாலியா, மங்கத் ராம் சிங்கல், ரமாகாந்த் கோஸ்வாமி, கிரண் வாலியா, நரேந்திர நாத், மதீன் அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பி.சி. சாக்கோ புகார்: இதனிடையே, 280 மண்டல காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர்கள், 14 மாவட்ட கமிட்டிப் பார்வையாளர்கள் ஆகியோரின் நியமனம் குறித்து தன்னிடம் ஆலோசனை நடத்தவில்லை என புகார் தெரிவித்து கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் பி.சி. சாக்கோ ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.