தேசியத் தலைநகர் வலயம், நொய்டா ஆணையத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ரிது மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச அரசு இது தொடர்பாக உத்தரவு வெளியிட்டுள்ளது.
ரிது மகேஸ்வரி காஜியாபாத் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்தார். தற்போது அவர் நொய்டா ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் இருந்த அலோக் டான்டன் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் நொய்டா ஆணையத்தின் தலைவர் பதவியில் தொடர்வார் என உத்தரப் பிரதேச அரசு வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முசாஃபர்நகர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த அஜய் சங்கர் பாண்டே, காஜியாபாத் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். 1986-ஆம் ஆண்டுப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அலோக் டான்டன், நொய்டா மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகத் தொடர்வார். யமுனை எக்ஸ்பிரஸ் தொழில் வளர்ச்சி ஆணையத்தின் தலைவராகவும் அவர் தொடர்வார் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நொய்டா ஆணையத்தின் கூடுதல் தலைமை செயல் அதிகாரி இந்திரா விக்ரம் சிங், ஷாஜஹான்பூர் மாவட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.