புராரி சட்டப்பேரவை தொகுதியில் விரைவில் மத்திய அரசின் பள்ளி கட்டப்படவுள்ளது என்று தில்லி பாஜக தலைவரும் வடகிழக்கு மக்களவைத் தொகுதி உறுப்பினருமான மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
தில்லி புராரி பகுதியில் மனோஜ் திவாரி, தில்லி வளர்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) துணைத் தலைவர் தருண் கபூர் ஆகியோர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மனோஜ் திவாரி கூறுகையில், புராரி ஜரோடா காலனியில் டிடிஏவுக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் மத்திய அரசுப் பள்ளியும், விளையாட்டு அரங்கமும் அமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளேன். மேலும், கோபால்பூர் விலேஜில் பூங்கா அமைக்கவும், அரசு நிலங்களை ஆக்கிரமித்து வைத்துள்ள நில மாபியாக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பேன் என்றார் அவர்.
இதுதொடர்பாக தருண் கபூர் கூறுகையில் ஜரோடா காலனியில் உள்ள டிடிஏவுக்கு சொந்தமான நிலத்தில் சிறு பகுதியை சட்ட விரோதமாக சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகள் மிக விரைவில் அகற்றப்படும்' என்றார்.