தில்லியில் மின்கட்டணத்தைக் குறைக்கக் கோரி பாஜக குரல் எழுப்புவது கேலிக்குரியது என துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.
இது தொடர்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:
நாட்டிலேயே தில்லியில்தான் மின்சாரக் கட்டணம் குறைவாக வசூலிக்கப்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் தில்லியை விட சுமார் 5 மடங்கு கூடுதலாக மின்சாரக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பாஜக ஆளும் தில்லியின் அண்டை மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மின்கட்டணத்தை அம்மாநில அரசு 26 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும், தில்லி தேசியத் தலைநகர் வலயப் பகுதியில் உள்ள குருகிராம், நொய்டா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களின் நகரங்களில் மின்கட்டணம் தில்லியுடன் ஒப்பிடும் போது மிக அதிகமாக உள்ளது. உதாரணமாக தில்லியில் முதல் 200 யூனிட் மின்சாரத்துக்கு ரூ.200, 200-400 யூனிட்டுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.2.50 வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் முதல் 150 யூனிட் மின்சாரத்துக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.4.90, 150-300 யூனிட் மின்சாரத்துக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.5.40 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த வகையில், தில்லியுடன் ஒப்பிடுகையில், பாஜக ஆளும் மாநிலங்களில் மின் கட்டணம் சுமார் 25 சதவீதம் அதிகமாகும். இந்நிலையில், தில்லியில் மின்சாரக் கட்டணம் தொடர்பாக பேசுவதற்கு பாஜகவுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என்றார் அவர்.