அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோவின் இந்திய வருகையைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் சார்பில் தில்லியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இரு நாள் பயணமாக பாம்பேயோ இந்தியாவுக்கு வந்துள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மண்டி ஹவுஸில் தொடங்கி, கஸ்தூர்பா காந்தி மார்கில் உள்ள அமெரிக்க மையம் வரை இடதுசாரிகள் பேரணி நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக், புரட்சிகர சோஷலிஸ கட்சி ஆகிய இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் பேசினர்.
எஸ் - 400 ஏவுகணைகளை வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வற்புறுத்தி வருவதற்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்ப்புத் தெரிவிப்பதற்குப் பதிலாக, அமெரிக்காவின் நெருக்கடிக்கு அடிபணிந்து வருகிறது.
நாட்டின் இறையாண்மை, சுயமரியாதை ஆகியவற்றை சமரசம் செய்து கொண்டு, அமெரிக்காவிடம் சரணடையக் கூடாது என்று இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி. ராஜா, இந்திய சோஷலிஸ மையத்தின் செயலர் பிரான் சர்மா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுபாஷினி அலி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.