தேசிய சில்லறை வர்த்தகக் கொள்கையை மத்திய அரசு 2 வாரத்தில் வெளியிடும் என தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது என்று அகில இந்திய வணிகர்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) தெரிவித்துள்ளது.
இது குறித்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீண் கண்டெல்வால் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: சில்லறை வர்த்தகக் கொள்கை குறித்து வணிகர் சங்கங்களுடனான விவாதம் வர்த்தகத் துறை அமைச்சகத்தில் தொழிற்சாலை, உள்நாட்டு வர்த்தகத் துறையின் செயலர் ரமேஷ் அபிஷேக் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சில்லறை வர்த்தகம் தொடர்பான கள நிலவரத்தையும், வணிகர்களின் நிலையையும் அறிய மத்திய அரசு தன்னால் இயன்ற முயற்சியை மேற்கொண்டுள்ளது. துன்புறும் வணிகர்களின் நிலையை மாற்றவும், அவர்கள் மேற்கொண்டுள்ள சில்லறை வர்த்தகத்தில் வளர்ச்சியைக் காணவும், அதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் தேசிய சில்லறை வர்த்தகக் கொள்கை அமையும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, தேசிய சில்லறை வர்த்தகக் கொள்கை, 650 பில்லியன் டாலர் மதிப்புடையது. இது நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் சில்லறை வர்த்தகத்தை சீராக்கும். குறிப்பாக வணிகர்கள் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுவதை எளிமையாக்கும். தேசிய சில்லறை வர்த்தகக் கொள்கையை மத்திய அரசு 2 வாரத்தில் வெளியிடும் என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் சுதேஷி ஜாக்ரன் மஞ்ஜ், லாகு உத்யோக் பாரதி, சில்லறை வர்த்தகர் சங்கங்கள், இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ), இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (எஃப்ஐசிசிஐ) உள்ளிட்டவைகளின் பிரதிநிகள் கலந்து கொண்டனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.