நெருக்கடி நிலை போன்ற சூழல் மீண்டும் ஏற்படக் கூடாது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
நாட்டில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975, ஜூன் 25-இல் நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். சுமார் 21 மாதங்கள் இந்த நெருக்கடி நிலை நீடித்தது. இந்தக் கால கட்டத்தில் அரசின் ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
நாடு முழுவதும் விசாரணை எதுவும் இன்றி சுமார் ஒரு லட்சம் பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் 44-ஆம் ஆண்டு நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பிரதமர் மோடி உள்பட அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக தில்லி முதல்வரும் ஆம் ஆத்மிக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது:
44 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியதன் மூலம், அப்போதைய பிரதமரால் ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதலை இந்தியா பார்த்தது. இந்த மாபெரும் ஜனநாயகத்தில் மீண்டும் அதேபோன்றதொரு அரசியலமைப்பை மீறும் நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என உறுதி எடுத்துக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.