பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தீர்ப்பது தொடர்பான வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையைத் தயாரித்து அதை முக்கிய கட்சிகளிடமும் அளித்து, அக்கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் அவற்றை இடம்பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்ள உள்ளதாக தில்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் தெரிவித்தார்.
இது தொடர்பாக தில்லியில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், சவால்கள் தொடர்பாக நிபுணர் குழு அமைத்து அறிக்கை தயார் செய்து வருகிறோம். அடுத்த வாரத்தில் இந்த அறிக்கை தயாராகிவிடும். அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து இந்த அறிக்கையை வழங்கவுள்ளேன்.
அந்த அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை அக்கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் சேர்த்துக் கொள்ளுமாறு கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை வைக்கவுள்ளேன். பாலியல் பலாத்கார வழக்குகளில் சிக்கும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்குகளை விரைவு நீதிமன்றத்தில் விசாரிப்பதை வரவேற்கிறேன். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்.
தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கும் கோரிக்கை ஆம் ஆத்மிக் கட்சியின் கோரிக்கை மட்டுமே அல்ல. வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக கட்சிகளும் தமது தேர்தல் அறிக்கையில் இக் கோரிக்கையை நிச்சயமாக இடம்பெறச் செய்வர்.
கடந்த 13 நாள்களாக தில்லியில் உள்ள அனைத்து குடிசைப் பகுதிகளில் பாத யாத்திரையாகச் சென்று அங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தேன். தில்லியின் குடிசைப் பகுதிகளில் போதைப் பொருள் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. ஆனால், தில்லி காவல்துறை இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார் அவர்.