மக்களவைத் தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்துவது குறித்து தில்லி மற்றும் அண்டை மாநிலங்களான உத்தரப் பிரதேசம், ஹரியாணாவின் காவல் துறை உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை மாலையில் நடைபெற்றது.
இதில் தென்கிழக்கு தில்லி, உத்தரப் பிரதேச மாநிலம், கெளதம் புத் நகர், ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாத் ஆகிய நகரங்களின் காவல் துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், ஜெய்த்பூர், பாதர்பூர், புல் பிரகலாதபூர் தென்கிழக்கு தில்லி மாவட்டத்தில் வருகிறது என்றும், காலிந்த் குஞ்ச், டிஎன்டி பார்டர் பகுதிகள் நொய்டாவில் வருகிறது என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கெளதம் புத் நகர் மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 11-ஆம் தேதியும் ஃப்ரீதாபாத் தொகுதிக்கு மே 12-ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற காவல் துறை அதிகாரிகள், இந்தத் தொகுதிகளில் தேர்தலை சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடத்துவது குறித்து விவாதித்தனர். மேலும், தேர்தல் பிரசாரங்களின் போது சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளை சமாளிப்பது குறித்தும், சட்டவிரோதமாக பணம் கொண்டு செல்லப்படுவது, மதுபானம், ஆயுதங்கள் விநியோகம் ஆகியவற்றை தடுப்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது என்று தென்கிழக்கு தில்லி காவல் துணை ஆணையர் சின்மாய் பிஸ்வால் கூறினார்.