தில்லி துவாரகா செக்டார்-3-இல் பணியிலிருந்த போது தலைமைக் காவலர் தாக்கப்பட்ட சம்பவத்தில் கடந்த ஓராண்டாக தேடப்பட்டு வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் சாணக்கியபுரியில் உள்ள சஞ்சய் கேம்பை சேர்ந்த சாஹித் அலி (27) என அடையாளம் காணப்பட்டுளளதாக போலீஸார் தெரிவித்தனர். அவர் 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் தெரிவித்தனர்.
இது குறித்து காவல் துறை மூத்த அதிகாரி சனிக்கிழமை கூறியதாவது: கடந்த ஆண்டு ஏப்ரல் 2-இல் தில்லி காவல் துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தவர், துவாரகா செக்டார் 3-இல் ரோந்துப் பணியில் இருந்தார். அப்போது, சாலையில் அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகளை யாரோ அகற்றுவதைப் பார்த்தார். இதைத் தொடர்ந்து, அதைத் தடுப்பதற்காக அந்த தலைமைக் காவலர் சென்றார். அப்போது, சாஹித் அலி மற்றும் அவரது 5 கூட்டாளிகள் தலைமைக் காவலரை சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பினர். மேலும், அவரிடம் இருந்த பணித் துப்பாக்கியையும் பறித்துச் செல்ல முயன்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் 5 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.
போலீஸுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சாஹித் அலி கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.