கடந்த ஆண்டு பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை தீபா மாலிக், பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தாம் கட்சியில் சேர்ந்ததன் மூலம் கட்சியின் அமைப்பு பலப்பட உதவும் என்று அவர் தெரிவித்தார். ஹரியாணா மாநில பாஜக பிரிவுத் தலைவர் சுபாஷ் பராலா, பொதுச் செயலர் அனில் ஜெயின் ஆகியோர் முன்னிலையில் அவர் அக்கட்சியில் திங்கள்கிழமை சேர்ந்தார். தடகள வீராங்கனை தீபா மாலிக் பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆவார்.
அவர் பாஜகவில் இணைந்தது குறித்து அனில் ஜெயின் கூறுகையில், "தீபா மாலிக்கை பாஜகவுக்கு வரவேற்பதில் மகிழ்கிறோம். எங்கள் அனைவருக்கும் அவர் ஒரு உந்துதலாக இருப்பவர். நாட்டின் பெருமைக்கு வித்திட்டவர்' என்றார்.
மக்களவைத் தேர்தலை ஒட்டி, ஹரியாணா மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக மேலிடம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், அந்த மாநிலத்தில் பாஜக சார்பில் தீபா மாலிக் போட்டியிட வாய்ப்பிருப்பதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன.