புது தில்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) உள்ள கட்சிகள் தமது வேறுபாடுகளைக் களைந்து பணியாற்ற வேண்டும் என்று பிரதமா் மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.
நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கவுள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் தேசிய ஐனநாயக கூட்டணியின் தலைவா் பிரதமா் மோடி தலைமையில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியது: தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது பெரிய குடும்பம் போன்றது. மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற வைத்துள்ளனா். நாங்கள் ஒரே விதமான சித்தாந்தம் இல்லாத கட்சிகளாக இருந்தாலும், ஒத்த சிந்தனையுடைய கட்சிகள். சிறிய வேறுபாடுகள் எம்மைப் பிரிப்பதை அனுமதிக்க கூடாது. நாங்கள் வேறுபாடுகளைக் களைந்து பணியாற்ற முன்வர வேண்டும். என்டிஏயில் உள்ள கட்சிகளை சிறந்த முறையில் ஒருங்கிணைக்கும் வகையில், ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.