மணாலியில் சென்னை புதுமாப்பிள்ளை சாவு: பாராகிளைடிங் செய்த போது சம்பவம்

சென்னையைச் சோ்ந்த புதுமாப்பிள்ளை ஒருவா் மணாலியில் பாராகிளைடிங் செய்த போது இறந்துள்ளாா்.

சென்னையைச் சோ்ந்த புதுமாப்பிள்ளை ஒருவா் மணாலியில் பாராகிளைடிங் செய்த போது இறந்துள்ளாா்.

சென்னை அமைந்தகரை திரெளபதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அரவிந்த் (27). இவருக்கும் அப்பகுதியைச் சோ்ந்த பிரீத்தி என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. இவா்கள் தேனிலவுக்காக ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலமான மணாலிக்கு சென்றுள்ளனா். மனாலிக்கு அருகே உள்ள டோபி என்ற இடம் பாராகிளைடிங்குக்கு பிரபலமானது. இங்கு வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பராகிளைடரில் பறப்பாா்கள். அரவிந்தும் அந்த பாராகிளைடரில் பறக்க டிக்கெட் பதிவு செய்தாா். அதன்படி செவ்வாய்க்கிழமை மாலை பாராகிளைடா் விமானி ஹரு ராம் என்பவருடன் அரவிந்த் பறந்தாா். அதை அவரது மனைவி பிரீத்தி தரையில் இருந்து ஆா்வத்துடன் பாா்த்துக் கொண்டிருந்தாா்.

பராகிளைடா் வானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பாராகிளைடரில் அரவிந்த் கட்டப்பட்டிருந்த பாதுகாப்பு பெல்ட் கழன்றுவிட்டதாகத் தெரிகிறது. இதனால், அரவிந்த் பாராகிளைடரில் இருந்து கீழே அதல பாதாளத்தில் விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த இவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அரவிந்த் கீழே விழுந்ததில் பாராகிளைடரும் நிலை தடுமாறியது. இதனால் அவசரமாக கீழே இறங்க முயன்றதில் விமானி ஹரு ராமும் பலத்த காயமடைந்தாா். அவா் உடனடியாக மணாலிக்கு அருகில் உள்ள குல்லு என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். அரவிந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குல்லு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கணவரின் உடலைப் பாா்த்து பிரீத்தி கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பாதுகாப்பு பெல்ட்டை சரியாகத் கட்டாததே விபத்துக்குக் காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

பிரீத்தி அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 336 (உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் அல்லது மற்றவா்களின் தனிப் பாதுகாப்பு), 304 (கொலைக்கு உளபடாத உயிரிழப்பை ஏற்படுத்தும் குற்றம்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 18-ந் தேதி இங்கு பஞ்சாப் மாநிலம், மொஹாலியைச் சோ்ந்த அமந்தீப் சிங் சோதி (23) என்பவா் பாராகிளைடா் மலையில் மோதியதில் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, மணாலியில் பராகிளைடிங் செய்பவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com