தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் பூசா சாலைப் பள்ளியில் மாணவர் பேரவை அமைக்கப்பட்டது.
இதற்கான உறுப்பினர்களை ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்தனர். பள்ளி மாணவர் தலைவராக 12-ஆம் வகுப்பைச் சேர்ந்த மோஹித், மாணவிகளின் தலைவராக தருணா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் பொறுப்பேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலர் ஆர். ராஜு முன்னிலையில் மாணவர்கள் "தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளியின் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் காப்போம்' என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
செயலர் ஆர்.ராஜு பேசுகையில், "இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வருங்காலத் தலைவர்களாக உருவாவதற்கான பயிற்சியைப் பெற்றுக் கொள்ளுங்கள். அனைவரும் பெருமைப்படும் விதமாக நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்' என்றார்.
இந்த நிகழ்வில், பூசா சாலைப் பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர் பரமசிவம், முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.