நிகழாண்டுக்கான கைலாஷ் மானசரோவர் யாத்திரை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: மானசரோவர் யாத்திரைக்குச் சென்ற 41 இந்திய யாத்ரீகர்கள் கொண்ட கடைசி குழு, திபெத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம், புன்டிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை திரும்பியது. இந்த ஆண்டு லிபுலேக் வழியாக ஆண்கள் 727 பேர், பெண்கள் 198 பேர் உள்பட 949 யாத்ரீகர்கள் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொண்டனர். இவர்களில் 23 பேர் தனிப்பட்ட சில காரணங்களுக்காக பாதிவழியிலேயே திரும்பினர். யாத்ரீகர்களில் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
மானசரோவர் யாத்திரை கடந்த ஜூன் 8ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு சுமுகமாக யாத்திரை நிறைவுபெற்றுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.