சந்திரயான் -2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிக்கு, தில்லி அரசு பள்ளி மாணவர்கள் திங்கள்கிழமை வண்ணப் பதாகைகளில் வாசகங்களை எழுதி ஆதரவு தெரிவித்தனர்.
சந்திரயான் -2இல் இருந்து பிரிந்த விக்ரம் விண்கலம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி நிலவுக்கு 2.1 கி.மீ. தூரத்தில் இருக்கும்போது, தகவல் துண்டிக்கப்பட்டது. இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தபோது, விக்ரம் லேண்டருடன் திடீரென ஏற்பட்ட தகவல் துண்டிப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. யாரும் எதிர்பாராத வகையில் நடைபெற்ற இந்த பின்னடைவால் அன்றைய தினம், இஸ்ரோ தலைவர் சிவன் கண்கலங்கினார். அவருக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். இருப்பீனும், சந்திரயான் -2 திட்டம் 95 சதவீதம் வெற்றி என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்நிலையில், சந்திரயான் -2 திட்டம் குறித்து தில்லி அரசு பள்ளி மாணவர்களுக்கு திங்கள்கிழமை விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அனைத்து மாணவர்களும் தங்கள் பள்ளிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆதரவாக வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இருந்தனர். "தொடர்புதான் துண்டிக்கப்பட்டது, முயற்சி அல்ல' என்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
இதுகுறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில், ""உங்களை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது' என தில்லி அரசு பள்ளி மாணவர்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தகவல் வைத்துள்ளனர். நிலவை அடையும் உங்கள் முயற்சி எங்கள் குழந்தைகள் அனைவருக்கும் ஊக்கத்தை அளித்துள்ளது' என்று தெரிவித்திருந்தார்.
மாணவர்களின் வண்ணப் படங்களை தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இதுகுறித்து தில்லி அரசு பள்ளி ஆசிரியர் மனு குலாட்டி கூறுகையில், "சந்திரயான் -2 திட்டம் முழுவதையும் மாணவர்கள் ஆர்வத்துடன் கண்காணித்து வருகின்றனர். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆதரவாக பதாகைகளை எழுத வேண்டும் என்ற நிகழ்வையே மாணவர்கள்தான் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.