நேபாளத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் தெற்கு தில்லி லாஜ்பத் நகரில் உள்ள தனது வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து தில்லி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: லாஜ்பத் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் சுனில் தமங் (28). நேபாளத்தைச் சேர்ந்த இவர், தில்லியில் உள்ள ஒரு உணவு விடுதியில் தலைமைச் சமையலராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இவர் தனது வீட்டில் இறந்துகிடந்தார். தனது நண்பரின் வீட்டுக்குச் சென்று விட்டு திரும்பிய போது கணவரின் மரணம் குறித்து மனைவிக்கு தெரிய வந்தது.
இது குறித்து வீட்டு உரிமையாளர் மூலம் போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சுனில் தமங் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, மனைவியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, அண்மையில் சுனில் தமங் வேலையை விட்டிருந்ததும், வேறு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்ததும் தெரிய வந்தது.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்தனர். முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்பதை கண்டறிய தமங் வசிக்கும் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை நடைபெறுகிறது என்றார் அந்த .