தில்லி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தீப்சந்த் பந்து மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்தில் பெண்ணுக்குப் பிரசவம் நிகழ்ந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய தில்லி பாஜக மூத்தத் தலைவர் விஜேந்தர் குப்தா, இது தில்லி அரசின் சுகாதார சேவைகள் முற்றிலும் செயலிழந்துவிட்டதைக் காட்டுகிறது என்று குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
சிகிச்சைக்காக வந்த கர்ப்பிணிப் பெண்ணை தீப்சந்த் பந்து மருத்துவமனையில் அனுமதிக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதையடுத்து, மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்தில் அவருக்கு பிரசவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் தில்லி அரசின் சுகாதார சேவைகள் முற்றிலும் செயலிழந்துவிட்டதைக் காட்டுகிறது.
தில்லி அரசு, சுகாதார சேவைகள் எனும் பெயரில் கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து வருகிறது. ஆனால், மருத்துவர்களின் தவறான செய்கையால் அப்பெண் வாகன நிறுத்துமிடத்தில் குழந்தையைப் பெற்றெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது மருத்துவமனைகளில் உள்ள உண்மை நிலைமை மற்றும் அரசின் மனப்போக்கைத் தெளிவாகக் காட்டுகிறது.
ஆகவே, இந்த விவகாரம் தொடர்பாக ஊழல் விசாரணையை மேற்கொள்வதற்காக துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலை திங்கள்கிழமை சந்திக்க உள்ளேன் என்றார் அவர்.