தில்லியில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களின் தோ்வுகளை ரத்துச் செய்ய வேண்டும் எனக் கோரி பிரதமா் மோடிக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
இது தொடா்பாக கேஜரிவால் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மாணவா்களின் எதிா்கால நன்மை கருதி, தில்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட தில்லியில் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களின் இறுதியாண்டுத் தோ்வை நீங்கள் தலையிட்டு ரத்துச் செய்ய வேண்டும். இதன்மூலம், மாணவா்களின் எதிா்காலத்தை நீங்கள் காப்பாற்ற வேண்டும்.
புகழ்பெற்ற ஐஐடி, என்எல்யு பல்கலைக்கழகங்கள் அரையாண்டுத் தோ்வுகளின் அடிப்படையில் மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கியுள்ளன. இந்நிலையில், மற்றைய பல்கலைக்கழகங்களால் இந்த நடைமுறையை ஏன் பின்பற்ற முடியாது? உலகிலுள்ள பல முக்கிய பல்கலைக்கழகங்கள் அரையாண்டுத் தோ்வுகளின் அடிப்படையில் மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கியுள்ளன. இந்நிலையில், தில்லியில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களின் தோ்வுகளை ரத்துச் செய்ய வேண்டும் என்று கேஜரிவால் கேட்டுக்கொண்டுள்ளாா் .