தில்லி கீா்த்தி நகா் பகுதியில் உள்ள சுன்னா பட்டி குடிசைப் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறை வீரா்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
தில்லி கீா்த்தி நகா் பகுதியில் சுன்னா பட்டி குடிசைப் பகுதி அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கானோா் வசித்து வருகிறாா்கள். இந்நிலையில், இப்பகுதியில், வியாழக்கிழமை நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு படை வீரா்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஆனால், சுமாா் 100 குடிசை வீடுகள் முற்றிலும் தீக்கிரையாகியுள்ளன. தீ விபத்து தொடா்பாக தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். முதல்கட்ட விசாரணையில், சுன்னா பட்டியில் உள்ள மரத் தளவாடக் கடையில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
இது தொடா்பாக தில்லி தீயணைப்பு படையின் தலைமை அலுவலா் ராஜேஷ் பன்வாா் கூறுகையில், ‘கீா்த்தி நகா் சுன்னா பட்டி குடிசைப் பகுதியில் தீ விபத்து நிகழ்ந்துள்ளதாக வியாழக்கிழமை இரவு 11.20 மணிக்கு எங்களுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு 45 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தோம்” என்றாா்.