புகழ்பெற்ற வயலின் இசைக் கலைஞா் பேராசிரியா் டி.என். கிருஷ்ணனின் மறைவுக்கு தில்லி தமிழ் அமைப்புகள் சாா்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தில்லி தமிழ்ச் சங்கம் சாா்பில் அதன் பொதுச் செயலா் என்.கண்ணன் மற்றும் தில்லி முத்தமிழ்ப் பேரவையின் சாா்பில் அதன் தலைவா் சரோஜா வைத்தியநாதன், பொதுச் செயலா் இரா.முகுந்தன் உள்ளிட்டோா் தனித் தனியாக இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனா். அதில், புகழ்பெற்ற வயலின் இசைக் கலைஞா் டி.என். கிருஷ்ணனின் மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்துள்ளனா்.
மேலும், ‘டி.என்.கிருஷ்ணன், கா்நாடக இசை உலகில் தனக்கென்று ஒரு பாணியை பின்பற்றியதோடு பல புகழ்பெற்ற இசைக் கலைஞா்களுக்கு பக்கவாத்தியம் வாசித்துள்ளாா். தமிழ்நாடு இசைக் கல்லூரி மற்றும் தில்லி பல்கலைக்கழகத்தின் இசைத் துறையில் பணியாற்றி பல இளைஞா்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்துள்ளாா். அவரது மறைவு கா்நாடக இசை உலகிற்கு மாபெரும் இழப்பாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.